Sunday 13 November 2016

நாட்டு நலனுக்காக இதை நாம் பொறுத்துக் கொள்ளக்கூடாதா?

Forward Message From DINAMALAR.must Read.
500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டதாகவும், சிறிது அவகாசம் கொடுத்திருக்கலாம் என்றும் சில தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகினறன. வாசகர்கள் சிலரும் இதேபோல் கருத்தை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் ராஜபாளையத்திலிருந்து ராமன் சுப்பிரமணியம் என்ற வாசகர் தனது கருத்தை எங்களுக்கு அனுப்பி இருந்தார். அதை வாசகர் கருத்து பகுதியில் வெளியிட இயலாத அளவுக்கு விரிவாக இருந்ததால் அதை ஒரு செய்தியாக இங்கு உங்களுக்கு தருகிறோம். அந்த வாசகர் எழுதியிருப்பதாவது:

நான் ஒரு ஓய்வு பெற்ற பாங்க் அதிகாரி. நமது பிரதமர் மோடி 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகளைச் செல்லாதென அறிவித்ததை வரவேற்கும் கோடானுகோடி இந்தியர்களில் நானும் ஒருவன். ஆனால் கடந்த இரு நாட்களாக நமது தொலைக்காட்சிகள், மக்கள் கருத்து என்ற பெயரில் தொடர்ந்து ஒளிபரப்பி வரும் எதிர்மறை விஷயங்களை பார்த்தும் கேட்டும் மிகவும் வேதனையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். ஏன் இந்த அலப்பறை? ஏதோ கடந்த இரண்டு நாட்களும் மக்கள் ஒருவேளை சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் தவிப்பதைப் போல் அந்த காட்சிகள் இருந்தன. நமது நாட்டில் பாங்குகளுக்கு தொடர்ந்து விடுமுறை விட்டதில்லையா? அல்லது ஏடிஎம்கள்தான் செயல்படாமல் இருந்ததில்லையா? நமது நாட்டில்தான் ஆ...ஊ... என்று எதற்கெடுத்தாலும் பந்த், கடையடைப்பு என்று கிளம்பி விடுவார்களே. யாராவது தலைவர் இறந்து விட்டால் ஊரே ஒரு வாரத்துக்கு ஸ்தம்பித்து விடுமே. அப்போதெல்லாம் பாதிப்பு ஏற்பட்டதில்லையா? இப்போது ஒரே ஒரு நாள் பாங்க் மூடியதற்கும் இரண்டு நாள் ஏடிஎம்கள் செயல்படாமல் போனதற்கும் ஏன் இந்த அலப்பறை?உயர் மதிப்பு நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக மோடி அறிவித்தது, நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றத்தான்; கறுப்பு பணத்தை ஒழிக்கத்தான். மயிலே மயிலே இறகு போடு என்று சாத்வீக முறையில் செப்டம்பர் 30 வரை அவகாசம் கொடுத்து பார்த்தார்; ஆனால் எதிர்பார்த்தபடி கறுப்பு பண முதலைகள் வழிக்கு வரவில்லை. எனவேதான் உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாதென்ற கத்தியை மோடி எடுக்க வேண்டியதாயிற்று.
இந்த அதிரடி நடவடிக்கையையும் அவர் எவ்வளவு சாதுர்யமாக கையாண்டார் என்பதைக் கவனிக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு முன்பே நூறு ரூபாய் நோட்டுக்களை அதிக அளவில் அச்சிட்டு அனைத்து பாங்குகளுக்கும் அனுப்பச் செய்தார். இந்த நடவடிக்கை குறித்து எவருக்கும் சந்தேகம் வந்து விடக்கூடாது என்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கச் செய்தார். இதனால் 500, 1000 ரூபாய் நோட்டுகள் பற்றி எவரும் சிந்திக்கவில்லை. நூறு ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு போல என்று நினைத்துக் கொண்டனர். இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சடித்ததால் 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என்று எவரும் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை.
கள்ளநோட்டு புழக்கம் எவ்வளவு:
நமது நாட்டில் புழங்கும் 16 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகளில், 13.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இவற்றுக்கு மாற்றாக புதிய நோட்டுக்களை கொடுப்பதென்பது சாதாரண காரியமல்ல. சிறிது காலம் பிடிக்கத்தான் செய்யும். அதற்குள் லபோ... லபோ என்று அடித்துக் கொண்டால் என்ன செய்வது? கடந்த டிசம்பரில் சென்னையில் வெள்ளம் வந்தபோது பாங்குகளும் ஏடிஎம்களும் செயல்பட்டனவா? அப்போது நாம் சமாளிக்கவில்லையா? ஒரு நல்ல நோக்கத்திற்கான நடவடிக்கைக்காக ஓரிரு நாள் சிரமத்தைப் பொறுத்துக்கொள்ள கூடாதா? அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் இந்த மாதிரியான அசாதாரண நேரங்களில் அங்குள்ள மக்கள் சமாளிக்கவில்லையா? சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட நாம் ஏன் தயங்குகிறோம்? ஏதோ சில கடைகளில் பொருட்கள் தர மறுப்பதையும் ஏதோ ஒரு சில சுற்றுலாவாசிகள் சிரமப்பட்டதையும் பெரிது படுத்தும் ஊடகங்கள், இலவச உணவு கொடுக்க முன் வந்த ஓட்டல்களைப் பற்றியும், பணத்தைப் பிறகு வாங்கிக் கொளவதாக கூறிய கடைக்காரர்களையும் பற்ற ஏன் கூறவில்லை? இவ்வாறு மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டவர்களைப் பற்றி அவர்களுக்கு தெரியாதா? அல்லது மோடியைக் குறை கூற வேண்டும் என்பதற்காக கண்டும் காணாமல் விட்டு விட்டார்களா?
எத்தனை கோடி:
இன்று நமது அரசியல்வாதிகளிடம் எத்தனை கோடி ரூபாய், 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக குவிந்து கிடக்கின்றன என்று அனைவருக்கும் தெரியும். ஒரு சாதாரண கவுன்சிலரிடம் கூட ஒரு கோடிக்கும் குறையாமல் ரொக்கம் இருக்கும் அப்படி இருக்கையில் அந்த கள்ளப் பணத்தை முடக்குவது எப்படி? 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்காமல் விட்டு, அவற்றை பாங்குகளிலிருந்து புழக்கத்தில் விடாமல் இருந்தாலே அந்த நோட்டுகள் ஒழிந்து விடாதா என்று சிலர் கூறுகின்றனர். பதின் மூன்றரை லட்சம் கோடி ரூபாயை முற்றிலுமாக மாற்றிக்கொடுக்க எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்? தற்போதுள்ள சூழ்நிலையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ஒவ்வொருவரிடமும் 5 கோடியாவது கறுப்பு பணம் இருக்க வாய்ப்பு உள்ளது. தாசில்தார் வரை பார்த்தால் எவ்வளவு கறுப்பு பணம் இருக்கும் என ஊகிக்கலாம். நம்நாட்டில் 1.5 கோடி அரசு ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்களில் சிலரைத் தவிர, மற்றவர்களிடம் இருக்கும் கறுப்பு பணத்தை வெளிக்கொணர வேண்டியது முக்கியம்.
காஷ்மீரில் கள்ளநோட்டு:
காஷ்மீரில் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கள்ள நோட்டு புழங்குவதாக ஒரு தகவல் கூறுகிறது. இந்தப் பணத்தை வைத்து தான் பயங்கரவாதிகள், காஷ்மீர் மக்களை தங்கள் பக்கம் திருப்பிக்கொண்டு, வன்முறைகளை ஊக்குவித்து வருகின்றனர். இதற்கெல்லாம் எப்படித் தான் நாம் தீர்வு காண்பது. இந்த கள்ள நோட்டு புழக்கத்தின் கடுமையை நாம் உணர்ந்தால், மோடி எடுத்த நடவடிக்கை சரியானதே என்ற முடிவுக்கு நாம் வருவோம்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மோடி அதிரடியாக இந்த முடிவை எடுத்திருக்கிறார். நோயைக் குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்யும்போது ஏற்படும் வலிலை நாம் பொறுத்துக் கொள்ளவில்லையா? மோடி இத்தகைய நடவடிக்கையை இத்துடன் நிறுத்திவிடாமல், 2 அல்லது 3 ஆண்டுக்கொருமுறை அதிரடியாக உயர் மதிப்புள்ள நோட்டுகளை வாபஸ் பெற்றால் தான் புதிதாக கறுப்பு பணம் சேருவதை தடுக்க முடியும்.
அதே போல்தான இந்த சில நாள் சிரமங்களும். நாட்டு நலனுக்காக இதை நாம் பொறுத்துக் கொள்ளக்கூடாதா?Raman Subramaniamrsubramaniam097@gmail.com http://www.dinamalar.com/news_detail.asp?id=1646527

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing