Monday 5 December 2016

#அம்மா என்றால் அன்பு #Amma



‘‘நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்’’ - இது ஜெயலலிதா, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லும் வசனம். இதை, வெறும் தட்டையான வரிகளாக மட்டும் பார்த்து கடந்து சென்றுவிட முடியாது. ஜெயலலிதாவை நீங்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினால், இந்த வரியை... அதன் உள்ளே பல அடுக்குகளில் ஒளிந்து இருக்கும் விஷயத்தை, அதன் அடர்த்தியை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆம், இந்த வரியைப் புரிந்துகொள்வதும் ஜெயலலிதாவை புரிந்துகொள்வதும் வெவ்வேறானது அல்ல.

முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை(5.12.2016) இரவு 11.30 மணிக்கு காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகார பூர்வமாக அறிவித்தது. 


தமிழகத்தின் தைரிய மங்கை 
இன்றோடு 05.12.2016 நீங்கா விடை பெறுகிறார் 
மக்கள் மனதில் அம்மா என்ற புனை 
பெயரில் விதை விதைத்து விட்டாய் 
1948. இல் ஜனனம் ...
1965 இல் தமிழ் படத்தில் நடித்து 
தமிழ் திரையுலகில் நீங்கா இடம் பிடித்தாய் 
1980 இல் அரசியல் பிரவேசம் செய்தாய் 
பொன் மனசெம்மல் கண்டெடுத்த முத்து நீ ...
1991 இல் முதன் முறையாக தமிழக மக்களின் 
ஆதரவோடு முதலமைச்சர் ஆனாய் அம்மா ..
இதுவரை 6 முறை அரியணை ஏறி... மக்கள் 
மனதில் நீங்கா இடம் பிடித்தாய் ...

ஜெயலலிதாவிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய குணங்கள்!

ஜெயலலிதாவின் மரணத்தை தமிழகம் எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகிறது. அரசியல் அபிமானம் என்பதையெல்லாம் தாண்டி ஒரு மனிதராக, தலைவியாக எல்லோருக்கும் பிடித்தமான ஒருவராக அவர் வாழ்ந்திருந்தார் என்பதையே இது காட்டுகிறது. பலருக்கும், பல விஷயங்களுக்கும் உதாரணமாக வாழ்ந்து சென்ற ஒருவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. அவற்றில் சில...
1) உறுதி:
 ஜெயலலிதா மறைந்தவுடன் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் எழுதப்பட்ட வார்த்தை ‘இரும்பு மனுஷி’. தனது முடிவுகளில், ஜெயலலிதா போல உறுதியாக நின்ற வேறு தலைவரை நம்மால் நினைவு கூற முடியாது. அரசியல் பிரவேசங்களுக்கு முன்பே இதுதான் அவரின் குணம். பலம். சில சமயங்களில் இந்த உறுதியே அவருக்கு எதிர்மறையாக போயிருக்கிறது. ஆனால், அதை பலமாக மட்டுமே கூடுமானவரையில் இருக்குமாறு பார்த்துக் கொண்டார் ஜெயலலிதா. 
2) தைரியம்:
உறுதியான முடிவுகள் எடுக்க தேவை தைரியம். ஜெயலலிதாவிடம் இருந்த தைரியம் மிகப்பெரியது. எந்தச் சூழலை கண்டும், எந்த மனிதரைக் கண்டும், எந்தப் பிரச்னையைக் கண்டும் ஜெயலலிதா பயந்ததில்லை. அந்த தைரியம் தான் அவரை கோடிக்கணக்கான மக்கள் மனதுக்கு கொண்டு சென்றது. கட்சிக்குள்ளேயும், கட்சிக்கு வெளியேயும் அவருக்கு நிகழ்ந்த பல கொடுமைகளை தைரியத்துடன் எதிர்கொண்டதாலே அவரால் இத்தனை ஆண்டும் இந்த நாட்டை ஆள முடிந்தது
3) நம்பிக்கை
தன் மேல் மட்டுமல்ல, மற்றவர்கள் மேலும் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை அதிகம். அவரை போல புதுமுகங்களுக்கு அரசியலில் வாய்ப்பு தந்த இன்னொரு தலைவர் கிடையாது. ஒரே தேர்தலில் ஒரு சாதாரண தொண்டன் அமைச்சர் ஆக முடிந்ததெல்லாம் ஜெயலலிதா காலத்தில் தான். இதை அரசியல் விமர்சகர்கள் பலர் குறையாக பார்த்தாலும், ஜெயலலிதா பாஸிட்டீவாகத்தான் நினைத்தார். அதன் பலன்களை அவர் கண்கூடாக பார்த்ததாலே தொடர்ந்து புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்புகளை அளித்தார். அதிகாரம் பகிர்ந்து பலருக்கும் கிடைக்க இது முக்கியமான ஒரு வாய்ப்பாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.
4) யாரையும் சார்ந்து இருந்ததில்லை
பிறர் மேல் அதிக நம்பிக்கை வைத்தவர் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மைதான் அவர் யாரையும் நம்பி இருந்ததில்லை என்பதும். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேட்ட குதர்க்கக் கேள்விகளுக்கு கூட துறை அமைச்சர்கள் பதில் அளிக்க இயலாமல் நிற்கும்போது அவரே பதில் அளித்ததுண்டு. எல்லா கன்ட்ரோலையும் தன்னிடத்தில் வைத்துக்கொண்டவர், அதை திறம்படவும் செய்தார் என்பதுதான் ஆச்சர்யம்.
5) மொழி ஆளுமை:
எந்த ஒருவரின் வெற்றிக்கும் அவர்களது கம்யூனிகேஷன் மிக முக்கிய பங்கு வகிக்கும். அதற்கு மொழியில் ஆளுமை முக்கியம். ஜெயலலிதாவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகள் நன்றாக தெரியும். அவரது ஆங்கில உச்சரிப்பும், வார்த்தை தேர்வுகளும் பிரபலம். சொல்ல வருவதை தெளிவாகவும், சுருக்கமாகவும், இன்முகத்தோடும் சொல்வதில் ஜெயலலிதாவுக்கு நிகர் அவரேதான்.
6) தலைமைப் பண்பு:
ஜெயலலிதா என்ற வார்த்தைக்கு அர்த்தமாக இதை சொல்லலாம். கோடிக்கணக்காக தொண்டர்கள் கொண்ட ஒரு கட்சியை, தன் ஒற்றை சொல்லுக்கு கீழ் கொண்டு வருவதெல்லாம் இமாலய சாதனை. மூத்த அரசியல்வாதிகள், அபார திறமைசாலிகள், வழிவழியாக அரசியலில் இருந்தவர்கள் என பலரையும் சமாளித்துதான் நிரந்தரப்  பொதுச்செயலாளர் என்ற இடத்துக்கு வந்தார். அதுபோலவே, எம்.ஜி.ஆருக்கு அடுத்து தொடர்ந்து இரண்டு முறை முதல்வராக தேர்வானவர் ஜெயலலிதா மட்டுமே. இவை அனைத்துக்கும் காரணம் அவரின் தலைமைப்பண்புதான். மக்களும் அதை நம்பியே அவருக்கு வாக்களித்தார்கள்.
7)  கடின உழைப்பு
ஒரு மாநிலத்தை ஆள்வது என்பது சாதாரண விஷயமில்லை. அதிகாரிகள், வசதிகள் என அனைத்தும் இருந்தாலும் தினம் தினம் பல மணி நேரங்கள் உழைக்க வேண்டிய ஒரு செளகர்ய சிரமம் அது. தனது வாழ்க்கையில் ஜெயலலிதா இத்தனை சிரமப்பட்டிருக்க வேண்டியதில்லை என ஒரு முறை சொல்லியிருக்கிறார்.
“"அம்மா சம்பாதித்ததை எல்லாம் சேர்த்துவைத்திருந்தால், நான் சினிமாவுக்கே வந்திருக்க வேண்டாம். என்னை நல்லா படிக்கவைச்சு, சாதாரணமான  குடும்பத்துப் பெண் மாதிரி 18, 19 வயசிலே நல்ல இடத்திலே கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தால், நான் நாலு குழந்தைகளுக்குத் தாயாகி இருப்பேன்... ஹேப்பியாக. இத்தனை அப்ஸ் அண்ட் டவுன்ஸ் என் லைஃப்பிலே இருந்திருக்காது."
என சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. எவ்வளவு சிரமங்கள் வந்தபோதும், தனது உழைப்பால் அதையெல்லாம் வெற்றிப்படிக்கட்டுகள் ஆக்கியவர் என்பது உண்மை. 



அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 68. டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  
தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் என்று சொல்லி அனுமதிக்கப்பட்டவர் நுரையீரல் பிரச்னை, சுவாசக் கோளாறு, நோய்த் தொற்று என பல உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குணமடையவேண்டி தமிழகம் முழுக்க அ.தி.மு.க. தொண்டர்கள் பல்வேறு வழிபாடுகளை நடத்தி வந்தனர்.
ஜெயலலிதா உடல்நிலை தேறிவருவதாக அப்போலோ மருத்துவர்கள் சொல்லிவந்த நிலையில், டிசம்பர் 4-ம் தேதி திடீரென அவருக்கு இதய முடக்கம் ஏற்பட்டதாகச் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தார்கள். இந்நிலையில் தொடர் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5-ந் தேதி இரவு 11:30 மணிக்கு காலமானார் ஜெயலலிதா.
தமிழகம் கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலும் இந்திய அரசியல் அரங்கிலும் இந்தச் செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா மறைவு, தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுக்கவே அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதா, 1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி கர்நாடக மாநிலம், மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர். பள்ளி செல்லும் பிராயத்திலேயே நடிக்கத் தொடங்கி, தமிழர்களின் அபிமான நடிகையாக தடம் பதித்தார். அவர் மனதுக்குப் பிடித்துதான் நடிப்புத் தொழிலை தேர்ந்தெடுத்தார் என்று சொல்வதற்கில்லை... ஆனால், அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டார். தன் முழு உழைப்பையும் கொட்டினார். ஆம், இதுதான் அவர் இயல்பே!  எதையும் அவரால் அரை மனதுடன் செய்ய முடியாது. இதை அவர் ஒரு நேர்காணலிலும் பகிர்ந்திருக்கிறார்.
இதனால்தான்  தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலும் முத்திரைப் பதித்து 120-க்கும் மேற்பட்ட  திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களில், அவரால் நடிக்க முடிந்தது.
அரசியல் அரங்கில் அ.தி.மு.க உறுப்பினராக அடியெடுத்து வைத்த ஜெ. 1984-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலும், அவர் மிளிர்ந்தார். அவரது பேச்சாற்றலை மூத்த ஊடகவியலாளர் குஷ்வந்த் சிங் பாராட்டி இருக்கிறார். தன் தாய் சந்தியாவுக்கு அடுத்து இந்திரா காந்தியை ஜெயா மிகவும் நேசித்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர் ஜெயலலிதா. அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறக்கும்வரை அக்கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருந்தார்.
1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த எதிர்க்கட்சி அந்தஸ்தின் மூலம் தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். 1991 தேர்தலில் வெற்றி பெற்று, முதல் முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல, 2001, 2011 மற்றும் 2016 ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக தேர்வானார். 2001-’06 காலகட்டத்தில் டான்சி வழக்கு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. மேல் முறையீட்டில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் முதல்வரானார். அதே போல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறை செல்ல நேர்ந்ததால், முதல்வர் பதவியை இழந்தார். பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டதால், 2015 மே மாதம், மீண்டும் தமிழக முதல்வரானார்.
2016 தேர்தலில் மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அரசியலில், எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பின்னர், ஒரு தலைவர் தொடர்ச்சியாக இருமுறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்றால், அது ஜெயலலிதாதான்!  தன்னம்பிக்கையும், மிகுந்த துணிச்சலும் கொண்ட ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவர். தற்போது முதல்வராக இருக்கும்போதே மரணமடைந்துள்ளார்.
‘புரட்சித் தலைவி’ என்றும், ‘அம்மா’ என்றும் அ.தி.மு.க-வினரால் கொண்டாடப்படும் செல்வி. ஜெ.ஜெயலலிதா உயிரிழந்தது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு நிச்சயம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவர்களின் துக்கத்தில் விகடனும் பங்கெடுக்கிறான். 
    
ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!
மக்களால் நான்! மக்களுக்காக நான்!
ஜெயலலிதா 16 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்துள்ளார். இவர் நிறைவேற்றிய திட்டங்கள் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களையும் சென்றடைந்துள்ளது. அதுவும் கடந்த 6 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை நடத்தினார். அவர் சிந்தனையில் உதித்த சில அரிய திட்டங்களை திரும்பி பார்ப்போம்.
மழை நீர் சேகரிப்பு திட்டம்
நிலத்தடி நீரை பெருக்கும்விதமாக மழைநீர் சேகரிப்பு திட்டத்தை உருவாக்கினார். இதன் மூலம் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் மழைநீர் சேகரிப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தின் நிலத்தடி நீர் மட்டம் உயர வழிவகுத்தார். 
மகளிர் போலீஸ் ஸ்டேஷன்
தமிழகத்தில் முதன் முறையாக முழுவதும் பெண்களால் இயங்கும் போலீஸ் ஸ்டேஷன்களை அமைத்தார். மேலும் காவல்துறையில் 30 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினார். 
பெண் கமாண்டோ பட
2003ல் இந்தியாவுக்கே வழிகாட்டும் விதமாக முதன்முறையாக, தமிழகத்தில் பெண்கள் கமாண்டோ படையை ஏற்படுத்தினார். 
புதிய வீராணம் திட்டம்
சென்னை மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் புதிய வீரணாம் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினார். 
லாட்டரி ஒழிப்பு
ஏழை எளிய மக்களின் வருமானத்தை சுரண்டிய, லாட்டரி சீட் கலாசாரத்தை ஒழிக்கும் விதமாக, அதனை முற்றிலுமாக தடை செய்து வெற்றி கண்டார். 
வீரப்பன் சுட்டுக்கொலை
சந்தன மர கடத்தல் வீரப்பனை பிடிக்க பல ஆண்டுகளாக கர்நாடகம், ஆந்திரா, கேரளா மாநிலங்கள் முயற்சி செய்தன. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வீரப்பன் தமிழக போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வீடியோ கான்பரன்ஸ்
கைதிகளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்துவதில் ஏற்படும் சிரமங்களை போக்கும் விதமாக, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தும் திட்டத்தை உருவாக்கினார். 
சுய உதவிக்குழு
பெண்களுக்கு வேலைவாய்ப் பளிக்கும் விதமாக சுய உதவிக்குழு திட்டத்தை கொண்டு வந்தார். 
இலவச சைக்கிள் 
அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தினார். 
நனவாகிய அரசு வேலை
முடங்கிக் கிடந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை சீரமைத்து நேர்மையாகவும், துரிதமாகவும் செயல்படும் தேர்வாணையமாக மாற்றிக்காட்டினார். இதன் மூலம் தேர்வாளர்களின் நன்மதிப்பை பெற்றார். 2011 முதல் 2016 வரை சுமார் 30 ஆயிரம் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்பட்டது. அதே போல, காவல் துறையில் 20 ஆயிரம் இடங்கள், டி.இ.டி., தேர்வு மூலம் 25 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் என போட்டித் தேர்வுகளின் மூலம் 75 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வழிகாட்டியாக திகழ்ந்தார். 
அம்மா உணவகம்
'தனி மனிதனுக்கு உணவில்லை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப, ஏழை மக்களின் பசித்துயர் நீக்கும் வகையில் 'அம்மா உணவகம்' என்ற திட்டத்தை 2013 பிப்., 19ம் தேதி சென்னை மாநகராட்சியில் 15 இடங்களில் தொடங்கப்பட்டது.
இங்கு இட்லி ஒரு ரூபாய், பொங்கல், சாம்பார் சாதம், எலுமிச்சை, கறிவேப்பிலை, தயிர் சாதம் ஆகியவை 5 ரூபாய்க்கும் வழங்கப்பட்டது. பின் இது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் விரிவுபடுத்தப்பட்டது. அதன் பிறகு தமிழகத்தில் உள்ள பிறமாநகராட்சி மற்றும் முக்கிய நகரப் பகுதிகளிலும் திறக்கப்பட்டன. 
அம்மா குடிநீர்
பயணம் செய்யும் மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் 10 ரூபாய்க்கு 1 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் வழங்கும் திட்டத்தை 2013 செப்., 15ல் தொடங்கினார். தமிழ்நாடு போக்குவரத்து கழகம் இதனை செயல்படுத்துகிறது. தினமும் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. 
தாலிக்கு தங்கம்
இதன்மூலம் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இல்வாழ்க்கை அமைய காரணமானார். பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. மேலும் டிகிரி படித்த பெண்களுக்கு 50 ரூபாயும், 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. 
இலவச லேப்டாப்
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் திறனை மேம்படுத்தும் விதமாக, இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். 
அம்மா முகாம்
மக்களைத் தேடி வருவாய்த் துறை என்ற அம்மா திட்டத்தை தொடங்கினார். மக்கள் அதிகாரிகளை தேடி போவதால் காலவிரயம் ஏற்படுகிறது. இதை தடுக்கும் விதமாக அதிகாரிகளே மக்களை தேடி சென்று அவர்களின் மனுக்களை பெற்று, தகுதியான நபர்களுக்கு ஒரே நாளில் சான்றிதழ்களை வழங்குவதே இதன் நோக்கம். இத்திட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் செய்தல், சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள், பட்டா மாறுதல் போன்றவை வழங்கப்படுகிறது. 
கோயில்களில் அன்னதானம
பழநி, ஸ்ரீரங்கம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டது. அதே போல தமிழகம் முழுவதும் 106 முக்கிய கோயில்களில் இந்த அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 
பென்னிகுவிக் மரியாதை
தமிழகத்தின் 5 மாவட்ட மக்கள் பயன்பெறும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அவருக்கு, தேனி மாவட்டத்தில் லோயர் கேம்பில் சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. 
மின்சார சலுகை
இந்த முறை 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டது என்ற திட்டத்தை செயல்படுத்தினார்.
அரசு கேபிள் டிவி
தனியார் நிறுவனங்களின் கைகளில் இருந்த கேபிள் 'டிவி'யை அரசே ஏற்று நடத்தும் என அறிவித்து, அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் மாதத்துக்கு 70 ரூபாய் கட்டணத்தில் மக்களுக்கு சேனல்கள் ஒளிபரப்பப்பட்டன.
இந்தியாவுக்கு இந்திரா தமிழகத்திற்கு ஜெ.,
15வது வயதில் திரை நட்சத்திரமாகத் தனது வாழ்வைத் தொடங்கி ஒரு மாநிலத்தையே ஆளும் ஆளுமையாக நிமிர்ந்தவர் ஜெயலலிதா மட்டுமே. 

பிரிட்டனுக்கு ஒரு மார்கரெட் தாட்சர்;
இந்தியாவுக்கு ஒரு இந்திரா; அதுபோல தமிழகத்துக்கு ஜெயலலிதா.

ஆணாதிக்கம் நிறைந்த உலகில் தனது தைரியத்தால் சாதித்தவர். ஆளுமைக் குணம் உயர்ந்து நிற்கும் போது அது தனக்கென ஒரு பாதையில் பயணிக்கும் என்பது உலகம் கண்ட உண்மை. 
சென்னையில் ஒருமுறை அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் ஒன்றில் பேசிய ஜெயலலிதா “யாரையும் சார்ந்திருக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு வாழ்க்கையில் அமையவில்லை. எப்போதுமே நல்லது என்றாலும், கெட்டது என்றாலும், எனக்கு நானே தான் முடிவுகளை எடுத்துக்கொண்டு, வாழ்க்கையில் எதுவந்தாலும் நானே தனித்து நின்று சந்தித்து கொண்டு, இப்படியே நான் செயல்பட்டு கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
விமர்சனங்களை கண்டு பயப்படாமல் அதனை வெற்றிப்படிகளாக்கியவர். ஜெயலலிதாவிடம் கருத்து வேறுபாடு உள்ளவர்கள்கூட அவரது துணிச்சல், தளராத முயற்சி, தொடர் போராட்டக் குணம் ஆகிய மூன்றையும் மறுக்க மாட்டார்கள். இதுதான் ஜெயலலிதாவின் வெற்றியின் ரகசியம்.

சட்டரீதியான வெற்றி
ஜெயலலிதா 1991 முதல் 96வரை தமிழக முதல்வராக இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் மீது பல்வேறு வழக்குகள் தி.மு.க., ஆட்சியில் தொடரப்பட்டது. வண்ண தொலைக்காட்சி வழக்கு, டான்சி நில வழக்கு, பிளசன்ட்டே ஓட்டல் வழக்கு, நிலக்கரி இறக்குமதி வழக்கு, டிட்கோ - ஸ்பிக் நிறுவன பங்குகள் வழக்கு, ஐதராபாத் திராட்சை தோட்ட வழக்கு, பிறந்தநாள் பரிசு வழக்கு, வருமானவரி கணக்கு வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு போன்ற வழக்குகள் போடப்பட்டன. இவை அனைத்தையும் சட்ட ரீதியாக அணுகி, குற்றமற்றவர் என வென்று காட்டினார்.
தொட்டில் குழந்தை திட்டம்
1991ல் தமிழக முதல்வராக முதன்முறையாக ஜெயலலிதாக பதவியேற்றார். அப்போது சில பகுதிகளில் பெண் சிசுக்கொலை எனும் கொடுமை இருந்தது. இதை தடுக்கும் விதமாக 1992ல் ஆதரவற்ற பெண் குழந்தைகளை அரசே வளர்க்கும் என அறிவித்து, 'தொட்டில் குழந்தை' திட்டத்தை தொடங்கினார். இந்தியாவிலேய மகத்தான திட்டமாக இது உருவெடுத்தது. 
முதல் கட்டமாக சேலம் மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. 2001ல் மீண்டும் முதல்வரான ஜெயலலிதா இத்திட்டத்தை மதுரை, தேனி, திண்டுக்கல், தருமபுரி மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தினார். இதனால் தமிழகத்தில் 2001ல் 1000 குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தைகள் என்ற நிலை மாறி, 2011ல் 946 ஆக அதிகரித்தது.
2011ல் 3வது முறையாக பதவியேற்ற ஜெயலலிதா, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தினார்.
ஆடு தந்த 'அம்மா'
* விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், 
* விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம், 
* விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம், 
* விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கும் திட்டம், 
* விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம், 
* விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம், 
* விலையில்லா 'சானிட்டரி நாப்கின்' வழங்கும் திட்டம், 
* மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள், புத்தகப்பைகள், காலணிகள், வண்ண பென்சில்கள், கணித உபகரணங்கள், புவியியல் வரைபட புத்தகங்கள் வழங்கும் திட்டம், 
* பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மகப்பேறு நிதியுதவி திட்டம், பசுமை வீடுகள் திட்டம்,
* அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை, அம்மா ஆரோக்கிய திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம் 
* அம்மா உப்பு
* அம்மா சிமென்ட்
* அம்மா மருந்தகம்
* அம்மா காய்கறி

உலக தமிழ் மாநாடு
உலகத் தமிழ் மாநாடு 1966ல் முதன்முறையாக நடந்தது. இதன் பின் ஏழு உலக தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில் ஜெயலலிதா முதன்முறையாக முதல்வராக பதவியேற்ற பின், 1995 ஜன., 1 முதல் ஜன., 5 வரை தஞ்சையில் நடத்தப்பட்டது. இதற்கு முன் எம்.ஜி.ஆர்., ஆட்சியில் ஐந்தாவது மாநாடு மதுரையில் 1981ல் நடந்தது. 
முல்லை பெரியாறு
முல்லை பெரியாறு அணையில் நீர்தேக்கும் உயரத்தை 136 அடியில் இருந்து 142 அடி உயரமாக அதிகரித்து விவசாயிகளின் துயரத்தை போக்கினார். இதற்காக நீண்டதொரு சட்டப் போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டார். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக 2014 ஆக., 22ல் மதுரையில் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர். 
காவிரி தாய்
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுக்கு 205 டி.எம்.சி., (1 டி.எம்.சி = 100 கோடி கன அடி) தண்ணீர் தரவேண்டும் என 1991ல் காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும் என ஜெயலலிதா தொடர்ந்து போராடி வந்தார். இறுதியில் 2013 பிப்., 20ல் மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. இதன் மூலம் காவிரி டெல்டா மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்தினார்.


ஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம், மரணத்தின் முற்றுப்புள்ளியோடு முடிந்திருக்கிறது. ஆணாதிக்கமிக்க அரசியலில் தான் ஒரு திண்ணென்ற பெண்ணென்று நின்று காட்டியவர் வென்று காட்டியவர் தன் போராட்டத்தை முடித்துக்கொண்டுவிட்டார். மாண்டியா மாவட்டம் மேல்கோட்டையில் பிறந்தவர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தன் நீண்ட வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார்.அவர் செய்த சாதனைகள் இன்னொரு பெண்ணால் எட்டமுடியாதவை. ஒரு கலையரசி புவியரசி ஆக முடியுமென்றது ஒரு சாதனை. ஒரு நட்சத்திரம் நிலவாக நீண்டது ஒரு சாதனை. திராவிட இயக்கத்தின் ஒரு கிளையின்மீது ஒரு பிராமணப் பெண்மணி பேராதிக்கம் செலுத்தியது ஒரு சாதனை. கலையுலகில் 'அம்மு' என்று அறியப்பட்டவர், அரசியல் உலகில் 'அம்மா' என்று விளிக்கப்பட்டது ஒரு சாதனை. தமிழ்நாட்டிலிருந்து ஒரு 'பிரதமர் வேட்பாளர்' என்று தன்னைப் பிம்பப்படுத்தியது பெருஞ்சாதனை.போராட்டங்களால் சூழப்பட்டது அவரது வாழ்வு. ஆனால் எந்த நிலையிலும் அவர் தன் கர்வப்பெருமையைக் கரைத்துக்கொண்டதில்லை. மழையில் நனைந்தாலும் சாயம்போகாத கிளியின் சிறகைப்போல இழிவுகளுக்கு மத்தியிலும் அவர்தன் இயல்புகளை மாற்றிக்கொண்டதில்லை.உறுதி என்பது அவர் உடன்பிறந்தது. ஒருமுறை கர்நாடகத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பின்போது, கன்னடப் போராளிகளால் சூழப்பட்டார். 'கன்னடம் வாழ்க, தமிழ் ஒழிக' என்று முழங்குமாறு வற்புறுத்தப்பட்டார். 'கன்னடம் வாழ்க' என்று சொன்னாலும் செல்வேனே தவிர எந்த நிலையிலும் 'தமிழ் ஒழிக' என்று கூறமாட்டேன் என்று துணிந்து நின்று வன்முறைக்கு நடுவிலும் வழிமாறாதவர் மொழிமாறாதவர் ஜெயலலிதா.

கலைத்துறையில் அவர் பதித்த தடங்கள் அழகானவை; அழியாதவை. அவரைத் தவிர யாரும் ஆடமுடியாது என்ற நடனங்களும், அவரைத் தவிர யாரும் நடிக்க முடியாது என்ற காட்சிகளும் அவருக்கே சொந்தம். 'எங்கிருந்தோ வந்தாள்' படத்தில் அவர் காட்டிய குணச்சித்திரம் கொண்டாடத்தக்கது. 'மேஜர் சந்திரகாந்த்' படத்தில் இறந்ததாக அவர் நடித்தபோது மரணத்திற்கே ஒரு செளந்தர்ய ஒய்யாரம் தந்திருப்பார். 'ஆயிரத்தில் ஒருவனில்' அவரது அழகு சந்தனச் சிலையா சந்திர கலையா என்று சொக்க வைக்கும்.சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார்; இந்தியாவின் மகளாய் மறைந்தார். எல்லோர்க்கும் வாய்க்காது இந்தச் சரித்திரம். 


உன்னை தெய்வம் அழைக்கிறது ...போய்
வா அம்மா .... என்றும் மக்கள் மனதில் 
நீ என்றும் அம்மாவாய் வாழ்வாய் ...


No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing