Wednesday 4 January 2017

#போலியோ சொட்டு மருந்து வழங்கும் தேதி மாற்றம்!

‘போலியோ வைரஸ்’ ஏற்படுத்துகின்ற தொற்றுநோய் தான் இளம்பிள்ளைவாதம். இந்நோய், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது. குறிப்பாக, குழந்தைகளின் கை, கால் தசைகளைப் பாதித்து, அவற்றின் இயங்கும் சக்தியை இழக்கச் செய்கிறது. எனவே, போலியோ நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 15ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி வரை 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், தமிழகத்தில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி இயக்கத்தின் மூலமாக இரட்டை தடுப்பூசி மருந்து 9 மாதம் குழந்தை முதல் 15 வயது ஆனவர்களுக்கு வரை 1.7 கோடி குழந்தைகளுக்கு வழங்கும் சிறப்பு முகாம் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால், இந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்களின் தேதியை மாற்றி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழகம் முழுவதும் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் 9 மாத குழந்தைகள் முதல் 15 வயதை எட்டியவர்கள் வரை உள்ளவர்களுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்புக்கான இரட்டை தடுப்பூசி மருந்து வழங்கப்படவுள்ளதால், முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 5ஆம் தேதி தொடங்கும், 2ஆம் கட்ட முகாம் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கும்’’ என தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு, ஜனவரி 17 ஆம் தேதி, தமிழகத்தில் 43,051 சொட்டு மருந்து மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing