Friday 11 November 2016

சமூக அக்கறையுடன் செயல்படும் இந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் பாராட்டுக்கு உரியவர்கள்!

Humanitarians. !

நெல்லை : ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாங்க மாட்டோம். ஆனா காசில்லாம சாப்பிடலாம். முடிஞ்சா அப்புறம் பணம் கொடுங்க. இல்லைன்னாலும் பரவாயில்லை," என அறிவித்து சேவையாற்றி வருகிறது நெல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்று.

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் பணம் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. அத்துடன், நேற்று ஒருநாள் வங்கிகள் மூடப்பட்டதுடன், ஏ.டி.எம் மையங்களும் செயல்படவில்லை. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினார்கள். கையில் ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் கரன்சிகள் இருந்தபோதிலும், அவற்றை வர்த்தக நிறுவனங்களும் ஹோட்டல்களும் வாங்க மறுத்ததால் மக்கள் செய்வது அறியாமல் திகைத்தார்கள். வெளியூர்களைச் சேர்ந்த சிலர் சாப்பிடக் கூட பணம் இல்லாமல் தவித்தார்கள்.

தமிழகம் முழுவதும் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெறப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். பெரும்பாலான ஹோட்டல்களில் இதே நிலை நீடித்ததால் பலர் உணவு உட்கொள்ள முடியாமல் தவித்தனர். சில ஹோட்டல்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெறப்பட்டன.

ஆனால் நெல்லையில் உள்ள ஒரு ஹோட்டலில் ரூ.500, ரூ.1000 ஆயிரம் நோட்டுகள் பெறப்படவில்லை. அதே நேரத்தில் பணம் இல்லாவிட்டாலும் சாப்பிட்டுச்செல்லலாம் என புதுவிதமாய் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது அந்த ஹோட்டல் நிர்வாகம். நெல்லை என்.ஜி.ஓ காலனியில் உள்ள ஹோட்டல் ஶ்ரீ பாலாஜி நிர்வாகம், தங்களது ஹோட்டலில் நேற்றும், இன்றும் யார் வேண்டுமானாலும் சாப்பிட்டுச் செல்லலாம் என அறிவித்து, அதை செயல்படுத்தியும் வருகிறது.

இதற்கான அறிவிப்பு பலகை ஹோட்டலின் முன்புறம் மட்டுமல்லாது, அரசு மருத்துவமனை வளாகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களிலும்  வைக்கப்பட்டு உள்ளதால், சில்லறை இல்லாமல் அவதிப்பட்டு வந்த பலர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார்கள்.

இது பற்றி ஹோட்டலின் உரிமையாளரான கோவி என்கிற கோவிந்தனிடம் பேசினோம். ‘‘திடீரென 500, 1000 ரூபாய நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதுடன் ஏ.டி.எம் மையங்களும் மூடப்பட்டதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். குறிப்பாக, பையில் பணம் இருந்த போதிலும் அதனை யாரும் வாங்காததால் செலவு செய்ய முடியாத நிலைமை உருவானது. அரசு மருத்துவமனையில் நோயாளிகளாக இருப்பவர்களுக்கு உதவுவதற்காக வெளியூர்களில் இருந்து வந்தவர்களிடம் 500, 1000 ரூபாய்கள் இருந்தபோதிலும் அதனை செலவு செய்ய முடியவில்லை. அதனால் உணவு சப்பிட முடியாமல் சிரமப்படும் தகவல் எனக்கு தெரிய வந்தது.

அதனால் அவர்களுக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என யோசித்தேன். நான் ஹோட்டல் வைத்து இருப்பதால் அவர்களுக்கு உணவு கொடுக்க முடிவு செய்தேன். அதனால் இன்றும் நாளையும் யார் வேண்டுமானாலும் வந்து சாப்பிடலாம். அவர்களிடம் ‘பில்’ எதுவும் கேட்க மாட்டோம். அவர்களிடம் பணம் இருந்து, கொடுத்தால் மட்டுமே வாங்கிக் கொள்கிறோம். அவர்கள் சாப்பிடுவதற்கான தொகையை எப்போது பணம் கிடைக்கிறதோ அப்போது வந்து கொடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை தராமல் போனாலும் பரவாயில்லை என முடிவு செய்து உள்ளோம்.

பணம் இருந்தும் சாப்பிட முடியாமல் பசியோடு யாரும் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். அதே சமயம், இலவசமாக சப்பாடு கொடுக்கிறோம் என்று சொல்லி அவர்களை கொச்சைப்படுத்தவும் விரும்பவில்லை. அதனால் தான், அவர்களாகவே எப்போது வேண்டுமானாலும் பணம் கொடுக்கலாம் என்று தெரிவித்து உள்ளோம்’’ என்றார்.

சமூக அக்கறையுடன் செயல்படும் இந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் பாராட்டுக்கு உரியவர்கள்!

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing